புதுடில்லி:-
ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் என்பதை வரையறை செய்யும், இந்திய தண்டனை சட்டத்தின், 377 வது பிரிவு, அரசியல் சட்டப்படி சரியானதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் என 377 வது சட்டப்பிரிவு கூறுகிறது. இதை ரத்து செய்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, 2013ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. எனவே, ஓரினச்சேர்க்கை என்பது சட்டப்படி குற்றம் என்ற நிலை தொடர்ந்தது.
இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் ஐந்து பேர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரணை செய்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 377 வது சட்டப்பிரிவு அரசியல் சட்டப்படி செல்லதக்கதா என ஆய்வு செய்யும்படி, உத்தரவிட்டது. இதன்படி, சுப்ரீம் கோர்ட் தான் ஏற்கனவே பிறப்பித்த ஒரு உத்தரவை மறு ஆய்வு செய்ய உள்ளது. இந்த விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றவும் உத்தரவிடப்படுகிறது.
ஒரின சேர்க்கையாளர்களுக்கு 5 பேர் தாக்கல் செய்த மனுவில்; வாழும் உரிமையில் தலையிடுவதாக சட்டம் இருக்க கூடாது . மாற்றி அமைக்க வேண்டும். செக்ஸ் விஷயம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆகும். இவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது சரியல்ல. இது போன்றவர்கள் எடுக்கும் விஷயத்தில் நாங்கள் அச்ச உணர்வோடு வாழக்கூடாது . இவ்வாறு கூறியுள்ளனர்.