புதுடெல்லி,
சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள், வீடியோ பதிவுகள் வேகமாக பரவி வன்முறை உருவாக காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தடுக்க மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் நாட்டின் 716 மாவட்டங்களில் சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.
இந்த மையம், சமூக ஊடகங்களின் தகவல்களை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், உள்ளூர் டி.வி. சேனல்கள், வானொலி உட்பட அனைத்தையும் கண்காணிக்கும் என்று தகவல்கள் வெளியானது.
இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஹூவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் இந்த முடிவால் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடும் நாட்டின் குடிமக்கள் கண்காணிப்படுவார்கள்.
எனவே இத்திட்டத்தை தடை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை கடந்த மாதம் 13-ந்தேதி விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘மத்திய அரசின் நடவடிக்கை நாட்டு மக்களை கண்காணிக்கும் நிலையை ஏற்படுத்துவதுபோல் உள்ளது’ என்று கருத்து தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘சமூக ஊடக மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது.
எனவே இதற்கு எதிரான அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.