சென்னை;-
சிவகார்த்திகேயன்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. மோகன்ராஜா டைரக்டு செய்துள்ளார். ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியதாவது:-
“மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தை பார்த்த பிறகு அதுமாதிரி வலுவான கதையம்சம் உள்ள ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். மோகன்ராஜாவை தொடர்பு கொண்டு கதை அமையும்போது எனக்கு நடிக்க வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டேன். ‘வேலைக்காரன்’ படத்தில் நடிக்க வைத்து விட்டார்.
நயன்தாரா
இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏகன் படத்தில்தான் அவரை முதலில் சந்தித்தேன். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வந்து விடுவார். படப்பிடிப்பு முடியும்வரை அரங்கிலேயே இருப்பார். அர்ப்பணிப்பு உணர்வை நயன்தாராவிடம் பார்க்க முடிந்தது. சினிமாவில் மார்க்கெட்டை இன்று வரை தக்க வைத்து வெற்றிகரமாக அவர் இருக்கிறார் என்றால் இந்த நல்ல குணங்கள்தான் காரணம்.
எனக்கு கார், வீடு எல்லாம் கொடுத்து இருப்பது சினிமா தான் . இதன்மூலம் மக்களுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்த வேலைக்காரன் படம். சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்கள் படத்தில் இருக்கிறது.
விளம்பர படங்கள்
விளம்பரங்கள் மூலம் குழந்தைகளுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து இருக்கிறேன். இதனால் இனிமேல் விளம்பர படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். வேலைக்காரன் படம் நல்ல மனிதனாக என்னை மாற்றி இருக்கிறது. இனிமேல் இதுமாதிரியான கதைகளை தேடி ஓடுவேன்.”
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.