பூந்தமல்லி:-
மதுரவாயல் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சிக்னல் அருகே அம்பத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில், வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், உடலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக் காயம் இருந்தது. தலையில் பலத்த காயம் இருந்தது. அதனால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கை, கால்களை கட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால் இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே பகுதியில் கொலை செய்தனரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மதுரவாயல் பகுதியில் இதே பாணியில் கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.