நானும் ஒரு விவசாயிதான் அதனால் விவசாயிகளின் சிரமம் எனக்கு நன்றாகத் தெரியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நேற்று அடிமடை வசதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார். அங்கு தூய்மைப் பணியிலும் அவர் ஈடுபட்டார். ஆளுநருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இருந்தார்.
பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "மக்கள் பங்களிப்பு இல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற முடியாது. வரும்நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அடுத்த முறை இங்கு வரும்போது தமிழில் பேசுவேன். இப்போது தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்றார்.
தொடர்து பேசிய அவர், "நானும் ஒரு விவசாயிதான். விவசாயிகளின் சிரமம் எனக்கு நன்று தெரியும். நமது மூதாதையர்கள் ஆறுகள், காடுகளை தெய்வமாக வணங்கினர். ஆனால், மக்கள் தொகை பெருக்கத்தால் நீரின் தேவை அதிகரித்துவிட்டது. மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர வேண்டும். மரம் வளர்த்தலை ஒரு கலாச்சாரமாக பின்பற்ற வேண்டும். அதேபோல், போதிய அளவு மழை பெய்தாலும்கூட அது கடலில் கலந்து வீணாகிவிடுகிறது. எனவே, மழைநீர் சேமிப்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வறட்சியைத் தவிர்க்க முடியும்" என்றார்.