ஓசூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியினை மாநில விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கி வைத்தார்.
-நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகா செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நான்காவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் மாநில விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் பொது மக்களோடு இணைந்து யோகா பயிற்சி மேற் கொண்டார். இதில் சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, வயதானவர்களுக்கு எளிய பயிற்சி, பிராணயாமம் போன்ற பல்வேறு முதற்கட்ட பயிற்சி வழங்கப் பட்டது. இவற்றை அனைவரும் ஆர்வத்துடன் செய்தனர்.
பின்னர் உரையாற்றிய அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, இன்றைய காலக் கட்டத்தில் உடலுடன் உள்ளமும் அமைதியை வேண்டுகிறது.
அவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக யோகா இருக்கிறது. வயதிற்கு ஏற்ற வகையில் முறையாக பயிற்சி மேற்கொண்டால், ஆரோக்கியம் மேம்படும்.
அதனால் தான் பாரத பிரதமர் அவர்கள் யோகவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த யோகா குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து, ஆண்டுத் தோறும் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் தற்போது ஆரோக்கியத்தை நோக்கி செல்வதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சக்தியாக இருக்கிறது என்று கூறினார்.