இராமநாதபுரத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திமுக நிர்வாகி கத்தியால் குத்தப்பட்டார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாகை சூடியது.
இதற்கு வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது.
இதற்கு வாக்களார்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று முன் தினம் உச்சிப்புளியில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைப்பெற்றது.
இதில் இராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்ற நவாஸ்கனி கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் திடீரென்று கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக மோதல் வெடித்தது.
இந்த மோதல் கடைசியில் கைகலப்பில் முடிந்தது. இராமநாதபுரம் திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகுவை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென்று கத்தியால் குத்தினர்.
பொதுக்குழு உறுப்பினரான வழுதூர் ராஜாவிற்கும் இன்பாரகுவுக்கும் சில நாட்களாக தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததால் அவரின் ஆதரவாளர்கள் தான் இன்பா ரகுவை கத்தியால் குத்தியதாக போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இன்பா ரகு கத்தியால் குத்தப்பட்டதில் அதிகளவில் ரத்தம் வெளியாக அவசரம் அவசரமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இன்பாரகுவிடம் புகாரைப் பெற்ற காவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.