PublicNewsTv- புதிய கருத்தடை ஊசி அறிமுகம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

PublicNewsTv- புதிய கருத்தடை ஊசி அறிமுகம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

PUBLISHED:14-Sep-2017

 

 சென்னை:-

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் புதிய கருத்தடை ஊசி அறிமுகம் செய்து  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

      அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் 

செய்தியாளர்களிடம் கூறியதாவது..

தற்போது தமிழகத்தில் ஆண் கருத்தடை சிகிச்சை, பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை, பேறுகால பின் கவனிப்பு கருத்தடை வளையம் பொறுத்துதல், சென்ட்ரோமன் மாத்திரைகள் வழங்குதல், மருத்துவ ரீதியான கருக்கலைப்பு திட்டம் ஆகியவை குடும்ப நலத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு துணை சுகாதார மையங்கள் முதல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் வரை தமிழகம் முழுவதும் 13,882 மருத்துவ மையங்களில் குடும்ப நல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மெட்ரோக்சி புரொஜெஸ்ட்ரோன் அசிடேட்” என்ற ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும் புதிய கருத்தடை முறையான ‘அன்டாரா’ (Antara) என்ற திட்டம் நீண்ட காலத்திற்கு கருவுருதலைத் தடுப்பதால் குழந்தை பிறப்பில் போதிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.

மேலும், 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்கள் உட்பட அனைத்து தாய்மார்களும் இக்கருத்தடை ஊசியை உபயோகப்படுத்தலாம். இது தற்காலிகமாக சினைமுட்டை உருவாவதை தடுத்து கருவுருதலை தவிர்க்கின்றது. இது பாதுகாப்பான தற்காலிக கருத்தடை ஊசி. 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கருத்தடை ஊசி போட்டுக் கொண்டால் போதுமானது. இந்த கருத்தடை ஊசி போட்டு நிறுத்திய பிறகு குறைந்தது 4 மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் மீண்டும் குழந்தை பேறு பெறலாம். முதற்கட்டமாக இந்த கருத்தடை ஊசி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்டு தாய்மார்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் குடும்ப நலத்துறை இயக்குனர் கு.ஜோதி, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் பானு, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் சாந்தி குணசிங் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Recommended For You