கட்டிடம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அமைச்சர் வழங்கினார்.
திருவொற்றியூர் பகுதியில் அரிவாக்குளம் குடிசைமாற்று வாரியம் குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அங்கு வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறினர். இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டும் புதிய வாழ்க்கையை துவங்க 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அவர்களுக்கு தேவையான உணவு , தண்ணீர் , பாய் தலையணை , ஸ்டீல் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று மாலையே அமைச்சர் தா.மோ.அன்பரசன் , மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் , கலாநிதி எம் பி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.
இதில் திமுக பகுதி செயலாளர் தி.மு.தனியரசு , அரசு அதிகாரிகள் , திமுக நிர்வாகிகள் என பலர் இருந்தனர்.