ஜெ. மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப்போகும் ஆறுமுகசாமி யார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கோவையை சேர்ந்தவர். 65 வயது ஆறுமுகசாமி 1952ம் ஆண்டு கோவையில் அர்த்தநாரிசாமி மற்றும் மாரியம்மாள் தம்பதிக்கு மகனான பிறந்தவர். கோவை வடக்கு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தவர். 1971ம் ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1974ம் ஆண்டில் சட்டம் பயின்று முடித்தார். கோவையில் வழக்கறிஞர் மயில்சாமி என்பவரிடம் வழக்கறிஞராக பயிற்சி பெற்று 1986ம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடி வந்தார். இதனைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 1998ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டவர். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய பின்னர் 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற ரெஜிஸ்டிரார் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர். 2014ம் ஆண்டு பணி ஓய்வு பெறும் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச்சிற்கான உறுப்பினராக பொறுப்பேற்றார்.