சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் தனது மளிகைக்கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் 5 மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் 12 நபர்கள் சத்தமிட்டபடி ஆயுதங்களை கீழே தரையில் தேய்த்தபடி வேகமாக வந்துள்ளனர்.
சேகரின் மளிகைக்கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. சேகரும் தாக்கப்பட்டார். பின்னர் அதே கும்பல் 34 வது தெருவுக்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியது.
இதுபற்றி கொளத்தூர், பெரவள்ளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கொளத்தூர் பூம்புகார் நகரில் நடந்து சென்ற பிஜு என்பவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடிய பெரவள்ளூர் பாட நகரைச் சேர்ந்த விக்னேஷ்(எ)விக்கி(எ)குப்பா(19), பெரவள்ளூர் எஸ்விஎம் நகர் எஸ்.ஆர்.பி காலனியை சேர்ந்த சதீஷ்குமார்(20) ஜவஹர் நகரை சேர்ந்த மணி (எ)மணிவண்ணனை(19) போலீஸார் பிடித்தனர். விசாரணையில் ஜி.கே.எம் காலனியில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தான் எனத் தெரியவந்தது. இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், இரண்டு கத்திகள், 3 செல்போன்களை போலீஸார் கைப்பற்றினர்.
மேலும் பெரவள்ளூர் போலீசார் நடத்திய தீவிர தேடுதலில் கொளத்தூர் திரூவிதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த யஷ்வந்தராஜ்(19) மற்றும் ஜி.கே.எம் காலனியை சேர்ந்த பிரவீன் குமார்(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.