சென்னை வேளச்சேரி:-
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியானதால் மனம் உடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர், வேளச்சேரி மெயின் ரோட்டில் போட்டோ பிரேம் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கஸ்தூரி (23). பட்டதாரியான இவருக்கும், திருச்சி அரியலூரை சேர்ந்த மோகன பாண்டியன் என்பவருக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மோகன பாண்டியன் சாலை விபத்தில் சிக்கி பலியானார். திருமணம் நின்றுபோனதால் மணபெண் கஸ்தூரி மனமுடைந்தார்.
மேலும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டாரே என்று நினைத்து வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கஸ்தூரி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஸ்தூரி தற்கொலை பற்றி விசாரிக்கின்றனர்.