சென்னையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறுதி பெரும்பான்மையுடன் உள்ளது. ஆனால் இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது.
சட்டமன்றத்துக்கு இப்போது தேர்தல் வருவதை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே விரும்பவில்லை. குறிப்பாக தி.மு.க.வில் உள்ள பழைய எம்.எல்.ஏ.க்கள்தான் தேர்தலை விரும்புகிறார்களே தவிர புதிய எம்.எல்.ஏ.க்கள் யாரும் தேர்தலை விரும்பவில்லை.
இதுபற்றி அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மு.க.ஸ்டாலின் தோற்று விடுவார்.
சசிகலா பரோலில் சென்னை வந்தால் அ.தி.மு.க.வுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ள டி.டி.வி.தினகரன் அதை என்னிடம் கொடுத்துள்ளதாக கூறுவது நகைப்புக்குறியது.
இப்படி சொல்கிறவரை தான்முதலில் பிடித்து விசாரணை நடத்த வேண்டும். தினகரன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றால் அதை அவர் சட்டப்படி அணுக வேண்டும்.
புரட்சித்தலைவி அம்மா அரசு மீது குற்றச்சாட்டும், களங்கமும் கூறி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டால் அதை சட்டம் எப்படி அனுமதிக்கும்?
ஒரு அரசை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பற்றி தரம் தாழ்த்தி விமர்சிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நடிகர் சிவாஜி சிலை கல்வெட்டில் கருணாநிதி பெயர் இடம் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
அவருக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி திருவள்ளூவருக்கு 133 அடி சிலை அமைக்க உத்தரவிட்டு கால்கோல் விழா நடத்தி சிலை அமைக்க வித்திட்டவர் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவரது பெயரை கல்வெட்டில் புறந்தள்ளி விட்டு சிலை வைத்தவர் கருணாநிதி. அப்போது எங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.
இதை நான் விவாதத்துக்காக சொல்லவில்லை. தன் மீது உள்ள குற்றச்சாட்டை ஸ்டாலின் புறந்தள்ளிவிட்டு பேசுவது சரியா? அவரது தந்தைக்கு ஒரு நீதி? எம்.ஜி.ஆருக்கு ஒரு நீதியா?
ஜெயலலிதா மரணம் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் விசாரணை கமிஷனை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கு நீதிபதியும் நியமிக்கப்பட்டு விசாரணை நடைமுறைகள் அறிவிக்கப்பட உள்ளன.
எனவே இப்போது அதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளது பற்றி நான் பதில் கூற முடியாது.
புலிகேசி ஆட்சி நடப்பதாக டிடிவி.தினகரன் கூறுகிறார் அதை சொல்பவர்தான் புலிகேசி.
இவ்வாறு அவர் கூறினார்