சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ.2000 தரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ஆனால் நோயாளிகள் தினமும் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள். இதனால் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். திருவள்ளூரில் நேற்று நான் சென்றதால் குப்பைகள் அள்ளப்பட்டது. இதே போன்று எல்லா பகுதிகளிலும், எல்லா நாளும் குப்பைகள் அகற்றப்பட்டால் நன்றாக இருக்கும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பே தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக் குழுவால் எந்த பயனும் இல்லை. இவர்கள் ஆய்வு அறிக்கையை பிரதமர் மோடியிடம் தான் ஒப்படைப்பார்கள். அதனால் டெங்குவை ஒழித்து விட முடியாது என தெரிவித்தார்.