ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம். டெங்கு காய்ச்சலை தடுப்போம் என்று முதல்வர் கே.பழனிசாமி பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆடியோவை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 1-ம் தேதி முதல் கடந்த 15-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 12 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவின் தீவிரத்தால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக எடுத்து வருகிறது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பற்றி பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி பேசியிருக்கும் ஆடியோ சுகாதாரத்துறை சார்பில் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் முதல்வர் கே.பழனிசாமி பேசியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். டெங்கு கொசு நல்ல தண்ணீரில் தான் வளருகிறது. இந்த கொசு பகலில்தான் கடிக்கிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும். தாங்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும். அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை கருவிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை பெற்றுக் கொள்ளவும். அரசு எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு பொதுமக்கள் நல்க வேண்டும். ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம். டெங்கு காய்ச்சலை தடுப்போம். நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி பேசியுள்ளார்.