சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மதுரை மற்றும் திருச்சி மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.து:
”தமிழகத்தில் இன்னும் பத்து நாட்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி தவிர தமிழகம் முழுதும் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் தகவல் கொடுத்து ஊழியர்களின் பலத்தை அதிகரிக்கச் சொல்லியிருக்கிறோம்.ஒவ்வொரு துணை இயக்குனர், இணை இயக்குனர்களுக்கும் தேவையான அளவு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டெங்குக் காய்ச்சலைக் கண்டறியும் எலிசா சோதனைக்கு உதவும் உபகரணங்கள், ஆய்வு மருந்துகள் வாங்க கூடுதலாக ரூ.4 கோடியே 12 லட்சம் ஒதுக்கியுள்ளோம். இது தவிர வருவாய்த்துறையும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வட்டாட்சியர், வார்டு அளவில் குழுக்கள் என அமைக்கப்பட்டுள்ளன.
காய்ச்சலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் குறும்படம் எடுக்கப்பட்டு, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் விரைவில் விழிப்புணர்வு பிரச்சாரமாக ஒளிபரப்ப உள்ளோம்.
நோயாளிகள் ஆரம்பத்தில் இரண்டு மூன்று மருத்துவமனைகளில் பார்த்துவிட்டு, நோய் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் காய்ச்சல் அதிகரித்து உயிரிழப்பு வரை செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல் நீடித்த உடனேயே அரசு மருத்துவமனைக்கு வந்தால் குணப்படுத்த முடியும்.
ஏற்கெனவே வாரம் தோறும் வியாழக்கிழமையை கொசு ஒழிப்பு நாளாக கடைப் பிடிக்கிறோம். இதில் அனைத்து இடங்களும் சோதிக்கப்படுகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என பாரபட்சம் எதுவும் பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் அபராதம் விதிக்கிறோம்.
அபராதம் விதிப்பது என்பது, யாரையும் அச்சுறுத்தும் நோக்கமல்ல; சிறிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுக்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைக்குள் கொசுக்கள் வளர்வது போன்ற சுகாதார சீர்கேடு இருந்தால் கண்டிப்பாக கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்படும்”. இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.