ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணையை தொடங்குவார் நீதிபதி ஆறுமுகசாமி என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின்பேரில், விசாரணை அறைக்குள் நடக்கும் உரையாடல்கள் வெளியில் கேட்காத அளவுக்கு, திரையரங்குகளில் உள்ள கட்டமைப்புபோல அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை நேற்று தொடங்க இருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலச மஹால் முன்பு காலை முதல் மாலை வரை காத்திருந்தனர். ஆனால், நீதிபதி ஆறுமுகசாமி வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது இன்னும் ஓரிரு நாளில் விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.