இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ள தேவர் குருபூஜையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அவரது 110வது பிறந்த நாள் விழா மற்றும் 55வது குருபூஜை ஆகியவை நடைபெறவுள்ளன. அன்று காலை 8.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன் , செல்லூர் கே. ராஜூ , ஆர். காமராஜ் , ஓ.எஸ். மணியன், டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், டாக்டர் எம். மணிகண்டன், ஜி. பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, தமிழக அரசின் சார்பில் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
மேலும் பசும்பொன் தேவர் நினைவிடம் அருகே அமைந்துள்ள கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமை வகிக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருஉருவப் படத்தை, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில், அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஓ.எஸ். மணியன், டாக்டர் எம். மணிகண்டன், ஜி. பாஸ்கரன் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர். இதில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளனர். விழாவினை சிறப்பாக நடத்த உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.