அதிமுக அரசின் அலட்சியத்திற்கு குழந்தைகள் பலியாகியிருப்பது வேதனைக்குரியது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மின்வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது குறித்து மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம் காட்டிய அரசின் மெத்தனத்தால் மின்சாரம் தாக்கி கொடுங்கையூரில் இரு சிறுமிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
எச்சரிக்கை விடுத்தும் தூங்கி வழிந்த அதிமுக அரசின் அலட்சியத்திற்கு குழந்தைகள் பலியாகி உள்ளன. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் இனியாவது அரசு விழித்துக்கொள்ள வேண்டும்'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.