மழை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மழைவெள்ள ஆய்வுப்பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நேற்று மாலைமுதல் இரவு வரை பெய்த கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. போக்குவரத்து முடங்கியது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள லாயிட்ஸ் சாலையில் தேங்கி நின்ற வெள்ள நீரால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சென்னையில் மழை துவங்கியது முதல் சென்னையில் நேரடியாக உயர் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆய்வு செய்து வருகிறார். இன்றும் ஆய்வு நடத்தினார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ஆணையரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறியதாவது:
சென்னை முழுதும் நிவாரண பணிகளிலும், உணவு வழங்கும் பணியிலும் காவலர்கள் ஈடுபடுகின்றனர். 24 மணி நேரமும் போலீஸாரும், உயர் அதிகாரிகளும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். மக்கள் பணி தான் எங்களுக்கு முக்கியம் எங்களுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவித்தார்.
மழை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டம் என கேட்டுக்கொண்ட காவல் ஆணையர், பொதுமக்களை பதற்றப்படுத்தும் வகையில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட காவல் ஆணையர் மதியத்திற்கு மேல் முடிச்சூர் பகுதியை பார்வையிட செல்வதாக காவல் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.