தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வர உள்ளார். இதையொட்டி சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினந்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்கும் மோடி பவள விழா மலரை வெளியிட்டு, தமிழறிஞர்களுக்கு விருதுகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
இதனால் பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வரும் மோடி, அங்கிருந்து காரில் பயணம் செய்து சென்னை பல்கலைக்கழகம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
விழா அழைப்பிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.