மழை வெள்ளத்தில், சென்னை தத்தளித்தபோது, நீர் வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பொது மக்களிடமும், சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிகிறது.
வட கிழக்குபருவ மழை தீவிரம் அடைந்து, சென்னையில், சில தினங்களாக, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையின் பல இடங்கள், வெள்ளக்காடு போல் காட்சி அளித்தன. மாநகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில், நிவாரண பணிகளில் ஈடுபட்டாலும், அவர்களை விடவும், போலீசார் மேற்கொண்ட நிவாரண பணிகள் மற்றும் போக்குவரத்தை சீர் செய்த விதம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வேப்பேரியில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. கனமழை பெய்யும்போதும், இன்ஸ்பெக்டர் வீரக்குமார், வெறும் கையால், அடைப்பை நீக்கி, வெள்ளம் வடிய, வழிவகை செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற, சமூகவலைதளங்களிலும், போலீசார் மேற்கொண்ட பணிகள் குறித்த படங்கள் வெளியானது. இதனால், சமூக வலைதளத்திலும், பொது மக்களிடமும், போலீசாருக்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது.