தமிழகத்தில், 52 பேர் நாடு முழுவதும், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு, 199 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் தமிழகமே முதலிடம்:-
நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில், மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வருகிறது. நாடு முழுவதும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்து, அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இது தொடர்பான பட்டியலில், யூனியன் பிரதேசங்களுடன் சேர்ந்து, 35 மாநிலங்கள் இடம் பெற்று உள்ளன. 19 மாநிலங்களில், உயிரிழப்புகள் இல்லை. உயிரிழப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இது தொடர்பாக, நேற்று வெளியான அறிக்கை: டெங்கு காய்ச்சலுக்கு, கேரளாவில், 19 ஆயிரத்து, 348 பேர் பாதிக்கப்பட்டு, 35 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், 17 ஆயிரத்து, 801 பேர் பாதிக்கப்பட்டு, 52 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில், 15 ஆயிரத்து, 248 பேர் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிர் இழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், 26 பேர்; மஹாராஷ்ராவில், 21; மேற்கு வங்கத்தில், 19 பேர், புதுச்சேரியில், ஐந்து பேர், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை, நடப்பாண்டில், நாடு முழுவதும், 1.21 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்; 199 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.