சமுதாயத்தின் நலனுக்காக செய்திகளை மக்களுக்கு அளிக்கும் பத்திரிகையாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள் என முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''ஜனநாயகத்தின்'" 4-வது தூண் என்று போற்றப்படும் பத்திரிகைத்துறை.
உன்மை செய்திகளை உள்ளதை உள்ளபடி நடுநிலையுடன் மக்களுக்கு தெரிவிக்கிறது. அத்துடன் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக திகழ்கிறது.
இத்தகைய பெருமைமிக்க பத்திரிகை துறையின் விழிகளாகவும் செவிகளாகவும் திகழும் பத்திரிகையாளரின் பணிகளை கவுரவிக்கும் இந்த தேசிய பத்திரிகையாளர் தின நன்னாளில், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இனிய நாளில் ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பத்திரிகையாளர்களின் நலனுக்காக தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ உதவி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சமுதாயத்தின் நலனுக்காக செய்திகளை மக்களுக்கு அளிக்கும் பத்திரிகையாளர்களை இத்தருணத்தில் பாராட்டி, அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்'' என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.