சென்னை:-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவரும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஸ்டான்லி மருத்துவமனையில் நடப்பதை அறிந்து அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவர்களை தேர்வு செய்யாமல் நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதை எதிர்த்துப் போராடிவரும், முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களை, தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபடவிருந்தனர்.
பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருவதை ஒட்டி அங்கு அனைவரும் திரண்டுசென்றனர். அமைச்சர் வருவதற்கு முன்னர் அங்கு சென்ற அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள், ,செவிலியர்கள் போன்றோரை பணிநியமனம் செய்திட ,மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் மூலம் முறையான அறிவிப்பை வெளியிட்டு,தேர்வை நடத்தி ,வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
ஆனால் நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை தமிழக அரசு நியமனம் செய்து வருகிறது. இவ்வாறு நேரடியாக நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதால், ஏற்கெனவே முதுநிலை மருத்துவம் பயின்று வரும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பணியாற்றும் டி.பி.எச் மற்றும் டி.எம்.எஸ் பிரிவிலிருந்து டி.எம்.இ பிரிவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. படிப்பை முடித்ததும் தாங்கள் விரும்பும் பணி இடங்களை தெரிவு செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. அரசுப் பணியில் ஏற்கெனவே சேவை செய்யும் மருத்துவர்களுக்கு எதிராக இந்தப் பணி நியமனம் உள்ளது.
இது போன்ற நேர்காணல் மூலம் பணியிடங்களைப் பெறுவதில் முறைகேடுகளுக்கும், பாரபட்சப் போக்கிற்கும் ,லஞ்ச லாவண்யத்திற்கும் நேர்காணல் மூலம் நடைபெறும் பணி நியமனம் வழி வகுக்கும் என்பது முதுநிலை மருத்துவ மாணவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
''இத்தகைய நேர்காணல் மூலம் நடைபெறும் பணி நியமனத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசுப் பணிக்கு சிறப்பு மருத்துவர்கள் விரும்பிச் சேரும் வகையில் அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை, படிகளை உயர்த்திட வேண்டும்.
அரசுப் பணியில் சேரும் மருத்துவர்கள் அனைவரும் கட்டாயமாக, இரண்டாண்டுகள் கிராமப்புற சேவையை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால், நேர்காணல் மூலம் மருத்துவர்களை பணி நியமனம் செய்யும் நிலையில், அவர்கள் பணியாற்றும் இடங்களை முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களுக்கு, மீண்டும் பணியில் சேர்வதற்கான கவுன்சிலிங் நடத்தும் பொழுது காலிப்பணியிடங்களாக காட்ட வேண்டும்'' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக, முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும் தகவல் அறிந்து சாலை மறியல் நடத்தாமல் அங்கு சென்று அமைச்சரைச் சந்திப்பது என முடிவெடுத்து அங்கு சென்றனர்.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற முதுநிலை மருத்துவ மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 6 நாட்களாக மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியும் அமைச்சரோ, செயலரோ கண்டுகொள்ளவில்லை.
இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு வந்ததால் அவரிடம் முறையிட முதுநிலை மருத்துவ மாணவர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.