சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் குவிந்துவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் ஆட்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, சர்வீஸ் சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவர்கள், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தடுப்புகளைத் தாண்டி குதித்து நுழைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் அவர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது மேலும் மாணவர்களை கைது செய்யக்கூடும் என தகவல்.