விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல இலவச பயணம் செய்ய அனுமதிக்கிறார்.
பொதுமக்களிடம் மிக நெருக்கமாக இருப்பவர்களில் அஞ்சல் ஊழியர், கேபிள் டிவி லைன் மேன் வரிசையில் ஆட்டோ டிரைவர்களும் அடக்கம்.
அதில் தனித்து நிற்கிறார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் மாவட்ட எல்லை கிராமங்களில் ஒன்றான கடலாடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜிஸ் ஆரோக்கியராஜ்(30). பத்தாம் வகுப்பு வரை படித்த இவரால் தொடர்ந்து படிக்க குடும்ப சூழல் இடமளிக்காததால் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல நாள் ஒன்றுக்கு இருமுறை இலவச சவாரி சென்று வருகிறார்.மாணவர்களை பள்ளி வாசலில் இறக்கி விட்டபடியே நம்மிடம் பேசினார். “எனக்கு 3 குழந்தைகள்; என் மனைவி அவர்களை பொறுப்பா பார்த்துகிறாங்க. ஆட்டோ வருமானத்தில் மட்டுமே குடும்பம் நடத்துகிறேன். நாள்தோறும் எனது வீட்டில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரமுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்பென்னாத்தூர் அரசுப் பள்ளிக்கும், நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசுப் பள்ளிக்கும் 15 மாணவர்களை இலவசமாக அழைத்துச் சென்று வருகிறேன். என்னால்தான் தொடர்ந்து படிக்க முடியவில்லை.அந்த நினைப்புதான் படிக்கிற, அதுவும் அரசு பள்ளியில் படிக்கிற பிள்ளைகளுக்கு ஏதாச்சும் செய்யணும்னு ஒரு நினைப்பு... என்னால் முடிந்த இதை செய்கிறேன்’’ என்கிறார் ரெஜிஸ் ஆரோக்கியராஜ்.